#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான் மற்றும் பெண் மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி அதன் வீடியோவை தனது யூடியூப் சேனலில் இர்பான் பகிர்ந்திருந்தார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பிரசவம் நடந்த சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதில், யூடியூபர் இர்பான் அறுவை சிகிச்சை அரங்குக்குள் அத்துமீறி நுழைந்து பிரசவத்தை வீடியோ பதிவு செய்ததும், மருத்துவர் நிவேதிதா முறையாக பயிற்சி பெறாத நபரிடம் கத்திரிக்கோலை கொடுத்து தொப்புள் கொடியை வெட்ட வைத்ததும் உறுதி செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து, யூடியூபர் இர்பான் மற்றும் மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்தின் இணை இயக்குநர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் மருத்துவர் நிவேதிதாவை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார் யார்? போன்ற விபரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதனிடையே அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யூடியூபர் இர்பான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை மீறியதற்காக இர்பான், அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.