அதிருப்தியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்களை குளிர்விக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் திருமணத்திற்கான முன்பணமாக ரூ.5 லட்சம் வரை பெறலாம் என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதிருப்தியில் அரசு ஊழியர்கள்:
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, அரசு ஊழியர்களை மையப்படுத்தி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. குறிப்பாக பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது, தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணிக்கு மாற்றுவது என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அவற்றை நிறைவேற்றாதது மட்டுமின்றி, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கியிருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு பரிசளிக்க தயார்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரக்கோரி அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசை கண்டித்து அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசை கண்டித்து பல அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். அதோடு, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தங்களை நேரில் சந்தித்து பேசிய ஸ்டாலின், முதலமைச்சர் ஆனதும் நேரில் சந்தித்து பேசக்கூட முன்வரவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என எச்சரித்து இருந்தனர்.
”திமுக அரசால் வேதனை”
அரசு ஊழியர்கள் எப்போதும் திமுக அரசுக்கு தான் ஆதரவு வழங்குதுவார்கள் என்பது தான் வரலாறு. காரணம் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்படாத முக்கியத்துவம் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். நிதி சார்ந்த பல்வேறு சலுகைகள் மற்றும் கோரிக்கைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு இருப்பது, அரசு ஊழியர்களை கடுப்பாக்கியுள்ளது. சொன்னதை நம்பிதானே வாக்களித்தோம், அதை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருந்த சலுகைகளை கூட பறித்தால் எப்படி என்பதே அரசு ஊழியர்களின் வேதனையாக உள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகள் மீண்டும் திமுகவிற்கு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமாதான முயற்சியில் ஸ்டாலின்:
திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பம் சார்ந்த வாக்கு வங்கியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாலின், அரசு ஊழியர்களை சமாதானப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். அதன் முதல்படியாகவே, பெரிதும் எதிர்பார்க்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த குழுவின் அறிக்கை நடப்பாண்டு இறுதிக்குள் சமர்பிக்கப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அரசு ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்புகள்:
110 விதியின் கிழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி,
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்
- அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சம் ஆக உயர்வு
- பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
- அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கான முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் ஆக உயர்த்தப்படும்
- அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கான முன்பணம் கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான முன்பணம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்
- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.500-லிருந்து ரூ.1000 ஆக வழங்கப்படும்
- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கான முன்பணம் ரூ.4000-லிருந்து ரூ.6000-ஆக வழங்கப்படும்
- 12 மாத பேறுகால விடுப்பு தகுதிகாண் பருவத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குகளாக மாறுமா?
அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்களை சாந்தப்படுத்தும் விதமாக, மேற்குறிப்பிடப்பட்டு நிதி சலுகைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனாலும், அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஆசியர்களுக்கான பணிநிரந்தரம், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் மனமிறங்குவார்களா? முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்புகள் வாக்குகளாக மாறுமா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.