சென்னை:
குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லக்கூடிய மலைவாசஸ்தலங்களான ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு அடுத்த இடத்தில் ஏலகிரி, ஏற்காடு, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஒக்கேனக்கல், கூடலூர் போன்றவை உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் மலை, மரங்கள், பசுமை நிறைந்த இப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், அங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. இதனை தவிர்க்க தமிழ்நாடு அரசு வனத்துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா மதிவேந்தன் அவர்கள் தலைமையில் “வனப் பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்தான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நேற்று சென்னை கிண்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு & பசுமையாக்குதல் மற்றும் நபார்டு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார். வேளாண் நிலங்கள் மற்றும் இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
பழங்குடியின மக்கள் நலனுக்காக 150 கிராமங்களில் செயல்படுத்தப்படும் ஆரம்பதிட்டப்பணிகளை ஆய்வு செய்தார். மனித ஆனை முரண்பாடு 55 கிராமங்களின் “முரண்பாடு களைதல்” பணிகள் மீது ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏலகிரி, ஏற்காடு, கூடலூர். கொல்லிமலை. ஒக்கேனக்கல், ஜவ்வாதுமலை மற்றும் உவியம்குகை ஆகிய இடங்களின் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
நிலுவையில் உள்ள “முதல்வரின் முகவரி” சார்ந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்குமாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத்தலைவர்) சுப்ரத் முஹபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை செயல்திட்டஅலுவலர் (கேம்பா) சுதான்ஷீ குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனச்செயல்திட்டம்) விஜேந்திர சிங் மாலிக், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (நிர்வாகம்) தெபாசிஸ் ஜானா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினகாப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப்பாதுகாப்புச்சட்டம்) யோகேஷ் சிங், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை திட்ட இயக்குநர் அன்வர்தீன், கூடுதல் முதன்மை தலைமைவனப் பாதுகாவலர் (வன உயிரினம்), நாகநாதன் மற்றும் அனைத்து மண்டல வனப்பாதுகாவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.