போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். சென்னை: சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ‘ஸ்பீக்கர்’ மூலம் அறிவிக்கும் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புவிசார் (ஜி.பி.எஸ்) நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு முதற்கட்டமாக 150 பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பிராட்வே-தாம்பரம்(21ஜி) பிராட்வே-சைதாப்பேட்டை (E18), பிராட்வே-குன்றத்தூர் (88 கே) ஆகிய பஸ்கள் புறப்பட்டு சென்றன. அப்போது உதயநிதி ஸ்டாலின், அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். பாரிமுனை வழியாக தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் வரை பயணம் செய்து அதன்பிறகு இறங்கி கொண்டனர். சென்னையில் மின்சார ரெயில்களில் அறிவிப்பு செய்வது போல் மாநகர பஸ்களிலும் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதிக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.