பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு வேலை ஏதும் இல்லாததால், சும்மா ஊர் சுற்றிவந்துள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
ராகவேந்திரா அந்த மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பள்ளியில் படிக்கும் அந்த மாணவி அவரின் காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார். இதனால், ஆவேசமடைந்த ராகவேந்திரா, ஒரு பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்துக்கொண்டு அந்த மாணவி தனியாக இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.ஆனால், மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராகவேந்திரா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். தீ உடல் முழுக்க பரவ மாணவி வலியால் கதறி துடித்துள்ளார். இவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.அப்போது மாணவி உடல் முழுக்க தீப் பற்றி எரிந்த நிலையில் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், ராகவேந்திராவின் உடையிலும் தீப்பற்றி அதன் காரணமாக அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
ந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் ராகவேந்திராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பலியான மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ராகவேந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.