சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது.
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
சஞ்சய் ராய் குற்றவாளி
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.
விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.