கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கள் போதைப் பொருள் அல்ல.
தஞ்சாவூர்: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கள் தடை நியாயமானது தான் எனக்கூறி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா? இது எங்களின் சவாலாகும் என்று தஞ்சாவூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூருக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கள் போதைப் பொருள் அல்ல.
கள் போதை என நிரூபிக்க முடியுமா என்ற சவாலை ஏற்று முன்னாள் முதல்வர்கள் கூட எங்களோடு வாதிட முன்விரவில்லை. கடந்த ஜன.21ம் தேதி விழுப்புரத்தில் நடந்த கள் விடுதலை மாநாட்டில் சீமானுக்கு கள் வழங்கப்பட்டது. அது போல வரும் மார்ச் மாதம் கள் விடுதலை கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில், கலந்துக்கொள்ளும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட விருந்தினர்களுக்கு கள் வழங்க உள்ளோம். தமிழக அரசே முன்னின்று மக்களுக்கு மதுவை டாஸ்மாக் மூலம் வழங்கி வருகிறது.
கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும்போது, மக்களுக்கு மாற்றாக கள்ளை முன்நிறுத்துவது புரிதலின்மையின் வெளிப்பாடு. கள் மதுவும் அல்ல; மதுவுக்கு மாற்றும் அல்ல. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கள் தடை நியாயமானது தான் எனக்கூறி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறதா? இது எங்களின் சவாலாகும்.
நீரா இறக்கி சந்தைப்படுத்தும் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் நிபந்தனைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். விவசாயிகள் விருப்பம் போல் நீராவாகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்கியும், குடித்தும், விற்றும் கொள்ளலாம். அரசின் தலையீடும், குறுக்கீடும் இதில் இருக்காது. மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக மாற்றி உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தி கொள்ளலாம். கலப்படம் இருந்தால் கடுமையான தண்டனை இருக்கும் என அரசு அறிவித்தால் நீரா திட்டம் வெற்றி அடையும். எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வருமானால் அதை கள் இயக்கம் முன்னின்று முறியடிக்கும். இந்த அறிவிப்பு வெளியானால் 2026 தேர்தலில் ஆளும்கட்சி அதிகாரத்தை தக்க வைக்க உதவும். ஆளும் தரப்பு தவறும் பட்சத்தில் எதிர் தரப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றால் அவர்கள் ஆட்சியை பிடிக்க வழிவகுக்கும். இவ்வாறு ஒரு அறிவிப்பு வந்தால் விவசாயிகள் மத்தியில் அரசிற்கு நன்மதிப்பை பெற்று தரும்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழு உள்ளது போன்று விவசாயிகளுக்கும் விவசாய கமிஷனை அமைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். பட்டறிவு அடிப்படையில் விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும்.
மேட்டூர் அணை 2024ம் ஆண்டில் 3 முறை நிரம்பினாலும், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 2018ல் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டின்படி அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்திவிட முடியாது. 28 ஆண்டுகால சட்டப்போராட்டத்தால் தமிழ்நாட்டை கர்நாடகா காவிரியின் வடிகாலாக ஆக்கியுள்ளது. கர்நாடகா அணைகளின் பாதுகாப்பை கருதியே தமிழ்நாட்டை காவிரியின் வடிகாலாக வைத்து உபரிநீரை திறந்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக நாள்தோறும் நீர்ப்பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் எஸ். பாலு தீட்சிதர், தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க கரூர் மாவட்டத் தலைவர் கொங்கு கே. முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.