இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம் கோவையில் இன்று நடந்தது. சரவணம்பட்டியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பேசியதாவது,
ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போறோம்?
கோவைனாலும் கொங்கு பகுதினாலும் இந்த மண்ணோட, மக்களோட மரியாதைதான் முதல் ஞாபகத்திற்கு வரும். இந்த பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சி பட்டறை. பேருதான் பயிற்சி பட்டறை. இந்த கூட்டம் அப்படினாலே ஓட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஓட்டுக்காக மட்டுமே நடக்குற சந்திப்பு கிடையாது. என்னடா இவர் இப்படி பேசிட்டாருனு நீங்க நினைக்கலாம். நாம தேர்தல் அரசியல் களத்துலதானே இருக்குறோம்.
ஆட்சி, அதிகாரம்னாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது. ஆனால், நாம ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறோம்? இது வரை பண்ணது மாதிரி எல்லாம் நாம பண்ணப்போறது இல்லை. நாம ஆட்சிக்கு வரனும்னு நினைக்குறதே மக்களுக்காகத்தான். மக்களோட நலனுக்காகத்தான்.
இனிமே அதெல்லாம் நடக்காது:
பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சிப் பட்டறையில மக்கள்கிட்ட இருந்து எப்படி நாம ஓட்டு வாங்கப்போறோம்? அப்படினு மட்டும் பேசப்போகுற பயிற்சிப் பட்டறை கிடையாது. மக்களோட நாம எப்படி ஒன்றிணையப் போறோம்னு ஆலோசிக்கத்தான் இந்த பயிற்சி பட்டறை.
இதுக்கு முன்னாடி நிறைய பேரு வந்துருக்கலாம். போயிருக்கலாம். பொய் சொல்லிருக்கலாம். மக்களை ஏமாத்திருக்கலாம். இதெல்லாம் பண்ணி ஆட்சியை பிடிச்சு இருக்கலாம். அதுக்கெல்லாம் நான் வரல. இனிமேல் அதெல்லாம் நடக்காது. நடக்கவிடப் போறதும் கிடையாது.
களம் ரெடியா இருக்குது:
நம்ம கட்சி மேல பெரிய நம்பிக்கையை கொண்டு வரப்போறதே தேர்தல் களப்பணியில பூத் லெவல் ஏஜெண்ட்சான நீங்கள்தான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போர் வீரனுக்கும் சமம். நாம ஏன் வந்திருக்கோம்? எதுக்கு வந்திருக்கோம்? எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அமைக்கப்போறோம்? அப்படிங்குறதை மக்கள்கிட்ட கொண்டு போய் சொல்லுங்க.
கண்டிப்பா கேப்பாங்க. உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கு?னு கேப்பாங்க. ஆனா நீங்க யாரு? நீங்க எப்படிப்பட்டவங்க? உங்க கேபாசிட்டி எப்படினு எனக்குத் தெரியும். நம்மகிட்ட என்ன இல்ல. மனசுல நேர்மை இருக்குது. கறைபடியாத அரசியல் பண்ணனும்னு நம்பிக்கை இருக்கு. லட்சியம் இருக்கு. உண்மை இருக்கு. செயல்பட திறமை இருக்குது. அர்ப்பணிப்பு குணம் இருக்குது. களம் ரெடியா இருக்குது. இதுக்கு மேல என்ன வேணும். போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்பு, நடிகர் விஜய் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து பூத் கமிட்டி ஏஜெண்ட்களுக்கான பயிற்சி பட்டறையில் தானும் பங்கேற்றார். நடிகர் விஜய் கோவை வந்திருப்பதை அறிந்த தவெக தொண்டர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் அவரை காண குவிந்தனர்.
சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.