முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை மீதான மானிய்அக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்:
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் கடந்த மாதம் 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, மார்ச் 17 முதல் 5 நாள்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற நிலையில், மார்ச் 24ம் தேதி முதல் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனல் பறக்கும் விவாதம்?
நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் பிறகும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கும். அதில் சட்டமன்ற அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு சட்ட-ஒழுங்கு விவகாரங்கள் குறித்து பதில் எழுப்ப உள்ளனர். குறிப்பாக, திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சாடி வரும் எடப்பாடி பழனிசாமியும் பேச உள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் பதில் அளிப்பார் என்பதால், இன்றைய கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்?
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து உள்ளதாகவும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் சட்ட ஒழுங்கி சந்தி சிரிப்பதாகவும் திமுகவை தாக்கி வருகிறார். இந்நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கிட்டத்தட்ட கடைசி விவாத நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விளக்கங்களை அளிக்க உள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கி சிக்ஸர் அடிப்பாரா? என திமுகவினர் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி, துறைசார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.
புதிய மசோதாக்கள்:
காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் முடிந்ததும், நடப்பு கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். அதில் மருத்துவக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டுபவர்களை விசாரணை இன்றி தடுப்புக் காவலில் வைக்கும் மசோதாவும் அடங்கும். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட உடன், வரும் 30ம் தேதியன்று சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு மீண்டும் இந்த ஆண்டு கடைசியில் சட்டசபை கூட்டம் நடைபெறும்.