மின்சாரத்துறை அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜியும், வனத்துறை அமைச்சர் பதவியை பொன்முடியும் ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டு அரசியல் பரபரப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் சிறைக்குச் சென்ற செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், தற்போது அந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
மேலும் ஒரு புறம் அமைச்சர் பொன்முடி பொதுவெளியில் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தங்களது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிக்கும் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு அமலாக்கத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி என்ன?
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு சுமார் ஓராண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், ஜாமினில் வெளியில் வந்த பிறகு அவருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்தால் அவரால் வழக்கிற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று வாதிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு அமைச்சர் பதவி அல்லது ஜாமின் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்? என்று கேள்வி எழுப்பியது.
பொன்முடி ஏன்?
பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மீண்டும் சிறைக்கு மீண்டும் செல்லும் அபாயம் ஏற்படும் என்பதால் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்துள்ள மற்றொரு அமைச்சரான பொன்முடி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பேசி வந்ததே அவருக்கு எதிராக அமைந்தது.
ஓசி பேருந்து என்று கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் மூலம் பயணம் பெறும் பெண்களை இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கியவர், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து பேசியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அப்போது முதலே பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுவாக எழுந்தது. அப்போது அவரது கட்சிப் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சிகள் தரும் அழுத்தங்களுக்கு மத்தியில் சொந்த கட்சியினரால் வரும் இடர்களை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த சூழலிலே அமைச்சர் பதவியை மூத்த தலைவரான பொன்முடி ராஜினாமா செய்துள்ளார். மேலும், சிறைக்குச் செல்ல வேண்டியதில் இருந்து தப்பிப்பதற்காக செந்தில் பாலாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.