இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் மீது இருமுனை தாக்குதலாக, சலால் அணையிலிருந்து தண்ணீரை திறந்துள்ளது இந்தியா.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு பக்கம் தாக்குதலுக்கு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மறுபக்கம் சைலென்ட்டாக ஒரு வேலையை செய்துள்ளது இந்தியா. அது, மறுமுனை தாக்குதலாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சரி, அது என்ன விஷயம் என்று பார்த்துவிடலாம்.
உச்சகட்ட போர் பதற்றத்தில் இந்தியா, பாகிஸ்தான்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா நடத்தியது. அதைத் தொடர்ந்து, மறுநாளே இந்தியாவின் மீது தாக்குதலை தொடங்கியது பாகிஸ்தான். இந்தியாவில் 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணும் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. அதையும் இந்திய ராணுவம் தடுத்தி நிறுத்தி அழித்து, பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் வரும் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், போர் பாதுகாப்பு நடவடிக்கையின் எதிரொலியாக சைரன் ஒலிக்கப்பட்ட நிலையில், முக்கிய நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்ததில், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ஆகாஷ் ஏவுகணைகள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. இப்படி ஒரு பக்கம் ஆயுதச் சண்டை நடைபெற்றுவரும் நிலையில், மறுபக்கம் தண்ணீரையும் இந்தியா கையிலெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், ரெய்சி பகுதியில் உள்ள சலால் அணையிலிருந்து திடீரென இந்தியா தண்ணீரை திறந்துள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த இந்தியா
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசும் இருப்பது தெரிந்த உடன் இந்தியா எடுத்த முதல் நடவடிக்கையே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது தான். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, கிழக்கு பகுதியில் உள்ள ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதியில் உள்ள சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கூறப்பட்ட நதிகளிலிருந்து கிட்டத்தட்ட 80 சதவீத நீரை பாகிஸ்தானே பெறுகிறது. இந்த நீரைக்கொண்டுதான், பஞ்சாப், சிந்து மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தான் விவசாயம் செய்துவருகிறது. பொதுவாக சொல்லப்போனால், இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் நீர் தேவைகளை சமாளிக்க உதவுகிறது.
இந்த தண்ணீர் தடைபடும் பட்சத்தில், பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்பட்டு, அது, அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துவிடும். நீர் இருப்பு குறைந்தால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, உணவுப் பற்றாக்குறை மற்றும் விவசாய வருமானத்தை நம்பியிருக்கும் கிராமப் பகுதி மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.
சலால் அணையிலிருந்து திடீரென தண்ணீரை திறந்துவிட்ட இந்தியா
இப்படி, தண்ணீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு முதற்கட்ட பதிலடி கொடுத்த இந்தியா, தற்போது அதே தண்ணீரை திறந்துவிட்டு, புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆம், ஜம்மு காஷ்மீரின் ரெய்சி மாவட்டத்தில் உள்ள சலால் அணையிலிருந்து 5 கதவுகளை இன்று திறந்துள்ளது இந்தியா.
செனாப் ஆற்றில் உள்ள இந்த அணையின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து கட்டுக்கடங்காத வேகத்தில் தண்ணீர் வெளியேறுகிறது. ஏற்கனவே நேற்று, ராம்பன் மாவட்டத்தில் உள்ள பக்ளிஹர் அணையின் 2 கதவுகள் திறக்கப்பட்டன. இதேபோல், ஜெலமில் அமைந்துள்ள கிஷன்கங்கா அணையும் திடீரென திறக்கப்பட்டது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்து அனைத்து அணைகளையும் இந்தியா மூடியது, பாகிஸ்தானில் வறட்சி ஏற்படும் சூழலுக்கு தள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது திடீரென ஒரே நேரத்தில் அணைகள் திறக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் வெள்ளத்தை ஏற்படுத்தி, அந்நாட்டு அரசின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா என்ற பார்வையும் எழுந்துள்ளது.
எனினும், அணைக்கு வரும் அதிகப்படியான நீர்வரத்தை சமாளிக்கவே கதவுகள் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், ஒரு சாரார், இதை ஒரு போர் யுக்தியாகவே பார்க்கின்றனர். எது உண்மை என்பது மத்திய அரசிற்கே தெரியும்.