தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.?
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களை காணலாம்.
கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ன.?
இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.
தற்போது பரவிவரும் புதுவகை வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனால் பாதிப்புகள் குறைவுதான் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி, பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 2 பேரும், கர்நாடகா மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலால் 5,364 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேரும், குஜராத்தில் 615 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, இதுவரை 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் தற்போது, NB1.8.1, LF.7 ஆகிய புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த வகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.