மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனிடையே நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் இந்தியா நிகழ்வில் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அது பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பிராந்திய கட்சிகள். 2024 இல் நடைபெறவுள்ளது அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மட்டுமே அதிமுக தலைமை வகித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை பாஜகதான். ஆக, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” என்று தெரிவித்தார்.