இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிறைய நல்ல கலைஞர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும், தங்கள் வீட்டிலேயே நடந்தது போல் மக்கள் கதறி அழுத அளவிற்கு, நல்ல குணம் கொண்ட நடிகர்கள் இந்த வருடம் இறந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
இந்த வருடம் உயிரிழந்த கலைஞர்கள்
மனோபாலா: இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் மனோபாலா. இவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி மரணம் அடைந்தார். கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனோபாலா உயிரிழந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
கே.விஸ்வநாத்: கே விஸ்வநாத் இந்திய சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக இருந்தார். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக இவர் நடித்திருப்பார். கமலஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்திலும் அவருக்கு மாமனாராக நடித்திருந்த இவர் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி உயிரிழந்தார்.
டி பி கஜேந்திரன்: இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தான் டிபி கஜேந்திரன். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர், 15 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்தார்.
எதிர்நீச்சல் மாரிமுத்து: சீரியல் என்பது பெண்களுக்கானது என்ற இலக்கணத்தை மாற்றியவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிய மாரிமுத்து. இவர் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மரணம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போல் மக்கள் கண்கலங்கினார்கள்.
ராமதாஸ்: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் தான் இ ராமதாஸ். இவர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த விட்டதாக அவருடைய குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது.
நெல்லை தங்கராஜ்: நெல்லை தங்கராஜ் என்பவர் தெருக்கூத்து கலைஞராக இருந்தவர். இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் கதையின் நாயகன் கதிருக்கு அப்பா கேரக்டரில் நடித்திருப்பார். இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.
சரத்பாபு: ஒரு காலகட்டத்தில் கமல் மற்றும் ரஜினி இணையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் சரத்பாபு. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுதே இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி சரத்பாபு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.